பதிவு செய்த நாள்
13
பிப்
2018
11:02
நாகர்கோவில்: சிவராத்திரியை ஒட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் விளவங்கோடு தாலுகாவில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் சிவராத்திரி நாளில் ஓடி சென்று வழிபடுவர்.
இதற்கு சிவாலய ஓட்டம் என பெயர்.
முஞ்சிறை திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிகோடு, திருநட்டாலம் ஆகிய 12 ஊர்களில் இந்த சிவாலயங்கள் அமைந்துள்ளன.இன்று சிவராத்திரியை ஒட்டி நேற்று மதியம் முஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து ஓட்டம் தொடங்கியது. விரதம் இருந்து காவி உடை அணிந்த பக்தர்கள் கையில் விசிறி, இடுப்பில் திருநீற்று பை ஆகியவற்றுடன் கோபாலா கோவிந்தா என்று அழைத்தவாறு ஓடினர். நேற்று இரவு முழுவதும் ஓடி இன்று பகலிலும் ஓட்டம் நடைபெறும்.மாலையில் திருநட்டாலம் கோயிலில் நிறைவு பெறும்.வாகனங்களில் செல்லும் பக்தர்கள் இன்று காலை ஓட்டத்தை தொடங்கி நள்ளிரவு நட்டாலம் கோயிலில் நிறைவு செய்வர்.அகந்தை கூடாது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற ஐதீகத்தின் அடிப்படையில் ஓட்டம் நடக்கிறது. இந்த 12 சிவாலயங்களிலும் இன்றும் நாளையும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிவராத்திரிக்காக குமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.