பதிவு செய்த நாள்
13
பிப்
2018
12:02
கீழக்கரை :உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில், பழமை வாய்ந்த சிவாலயமாக விளங்குகிறது. இன்று மாலை பிரதோஷ வழிபாடும், மாசி மகா சிவராத்திரியும் ஒரே நேரத்தில் வருவதால் உத்தரகோசமங்கை கோயிலுக்கு ஏராளமான சிவனடியார்கள், திருத்தொண்டர்கள், பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
இன்று இரவு 9:00 மணிக்கு மூலவர் மங்களநாதர் சுவாமிக்கு துவங்கும் முதல் கால பூஜையுடன் மறுநாள் அதிகாலை (பிப். 14)4:00 மணி வரை நடக்க உள்ளது. கோயில் பரம்பரை ஸ்தானிக சிவாச்சாரியார்களால் 21 வகையான அபிஷேக ஆராதனைகள், திருமேனியில் வில்வ இலை மற்றும் தாழம்பூ சூடுதல், சிவபுராணம், சிவ சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாசகம் முற்றோதல் ஆகியவை நடைபெறும்.இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி தரிசனம் நடக்க உள்ளதால், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தவாறு உள்ளனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.