பதிவு செய்த நாள்
13
பிப்
2018
01:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள இருமத்தூர் தென்பெண்ணை ஆறு வறண்டு காணப்படுவதால், சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளது இருமத்தூர். இங்கு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வருவர். இவர்கள் ஆற்றில் குளித்து விட்டு, சிவன் கோவிலில் சுவாமி கும்பிட்டு, கோவில் அருகே சமையல் செய்து சாப்பிடுவர். இந்நிலையில், கே.ஆர்.பி., அணை ஷட்டர், கடந்த ஆண்டு நவம்பரில் உடைந்ததை அடுத்து, இருமத்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையில் இருந்த தண்ணீர் வற்றியபிறகு ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தற்போது திறந்து விடப்படும் தண்ணீர், அரசம்பட்டி வரை மட்டுமே செல்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக இருமத்தூரில் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் ஆங்காங்கே சிறிதளவு தேங்கியுள்ள தண்ணீரை எடுத்து தலை மேல் தெளித்துக் கொண்டு செல்கின்றனர்.