பதிவு செய்த நாள்
14
பிப்
2018
10:02
தஞ்சாவூர்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால், பரபரப்புஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு, மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் வந்தனர். நாட்டியாஞ்சலி துவக்க விழாவும் நடந்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நபர்கள் மேடை அருகில் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும், சிவராத்திரியை முன்னிட்டு, கோவிலில் இரவு முழுவதும், பக்தர்களுக்கு பால் தருவது வழக்கம். இதன்படி நேற்றும், பக்தர்களுக்கு பால் வழங்குவதற்காக, கோவில் கொடிமரம் ஈசான்ய மூலையில், காஸ் சிலிண்டரை வைத்து, பால் காய்ச்சினர். அப்போது, திடீரென காஸ் சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த சமையல்காரர் கூச்சலிடவே, பக்தர்கள் அலறி அடித்து, வெளியில் ஓடினர். வெளியில் இருந்த பக்தர்களும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் கோவிலுக்கு உள்ளே செல்ல முயன்றதால், சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, 20 நிமிடங்கள், காஸ் சிலிண்டர் குழாய் எரிந்து கொண்டிருந்தது. நீதிபதியின் பாதுகாப்பு, எஸ்.ஐ., பாபுவும், கோவில் ஊழியர் சிவாஜி ஆகிய இருவரும், கோணியை நனைத்து காஸ் சிலிண்டர் குழாய் மீது போர்த்தி, சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். பின், குழாயை துண்டித்தனர். இந்த விபத்தால், கோவில் வளாகத்தில், 30 நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.