பதிவு செய்த நாள்
14
பிப்
2018
12:02
திருப்பூர் :திருப்பூர் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நான்கு ஜாம பூஜைகள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழுங்க, விடிய விடிய சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். மகிழ்ச்சியான வாழ்வு, செல்வம், கல்வி வளம் அருளும் மகா சிவராத்திரி விழா, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில், நேற்று நடந்தது. மாலை முதலே, கோவில்களுக்கு அதிகளவு பக்தர்கள் வர துவங்கினர்.மாலை, 6:00 மணிக்கு, முதல் ஜாம பூஜைகள் துவங்கின. அப்போது, மூலவருக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தன பூசப்பட்டு, வில்வம், தாமரை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு அர்ச்சனை நடைபெற்றது. இதை தொடர்ந்து, இரண்டாம் ஜாம பூஜை நடைபெற்றது. அப்போது எம்பெருமானுக்கு, சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சை கற்பூரம் பன்னீர் சேர்ந்து சார்த்தப்பட்டது. துளசி அலங்காரம், சிவனுக்கு உகந்த வில்வ இலையால் அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
சிவராத்திரியின் மூன்றாம் ஜாம பூஜையின் போது, தேன் அபிஷேகம் செய்யப்பட்டு, பச்சை கற்பூரம் சார்த்தி, மல்லிகை அலங்காரம் மற்றும் வில்வ இலை அர்ச்சனை நடந்தது. அதை தொடர்ந்து, நான்காம் ஜாம பூஜைகள் நடைபெற்றன. இதில், கரும்பு சாறால் அபிஷேகம் செய்து, நந்தியா வட்ட மலர் சார்த்தி, அல்லி அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. நான்கு ஜாம பூஜையின் போதும், வேதமந்திரங்கள் முழங்க, அபிஷேக மற்றும் அர்ச்சனைகள் நடந்தது. இரவு முழுவதும் கோவில்களில், பரத நாட்டியம், பக்தி சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விடிய விடிய நடந்த பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.
அவிநாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று நான்கு கால பூஜைகள் நடந்தன; இரவு முழுவதும் சிவனடியார்கள் பூஜை செய்து வழிபட்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவிநாசி காசி விஸ்வநாதர் கோவில், குட்டகம் முக்கண்ணீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ் வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், இரவு முழுவதும் விசேஷ பூஜைகள் நடந்தன.