திருமூர்த்திமலைக்கு திருச்சப்பர ஊர்வலம் சிவராத்திரி விழா களை கட்டியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2018 12:02
உடுமலை:சிவராத்திரியை முன்னிட்டு உடுமலை பூலாங்கிணறிலிருந்து திருமூர்த்திமலைக்கு திருச்சப்பரம் எடுத்துச்செல்லும் திருவிழா நடந்தது. சிவனின் முழுமையான அருள்பெற, உறங்காது விழித்திருந்து வழிபடும் சிவராத்திரியை முன்னிட்டு உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டுதோறும் திருமூர்த்திமலையில் நடைபெறும் சிவராத்திரி பூஜைக்கு, உடுமலை பூலாங்கிணறில் திருச்சப்பரம் எடுத்துச்சென்று வழிபடுவது வழக்கம். அதேபோல், நேற்று சிவராத்திரியை முன்னிட்டு பூலாங்கிணறில் இருந்து திருமூர்த்திமலைக்கு ஊர்மக்கள் ஒன்றுகூடி திருச்சப்பரம் எடுத்துச்சென்றனர்.
பூலாங்கிணறில் துவங்கிய திருச்சப்பரம் பவனி ஆர்.வேலுார், வாளவாடி, தளி, திருமூர்த்திநகர் வழியாக கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கிராம மக்கள் திருச்சப்பரத்துக்கு மரியாதை செலுத்தி வழிபட்டனர். திருச்சப்பரத்துக்கு நாளை கிருஷ்ணாபுரம் விநாயகர் கோவிலிலும், முக்கோணம் முத்தாலம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இரவு முழுவதும், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பூளவாடி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.