பதிவு செய்த நாள்
15
பிப்
2018
01:02
திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தெப்பக்குளத்தில் போர்வெல் தண்ணீர் குழாய் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவம் பிப்.,21ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. கோயில் தெப்பக்குளமான தி.வைரவன்பட்டியிலுள்ளஜோதிடர் குளத்தில் தெப்ப திருவிழா நடக்கும்.பருவ மழை ஏமாற்றினாலும் அவ்வப்போது பெய்த மழை நீர் வரத்துக் கால்வாய்கள் மூலம் ஓரளவு இக்குளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களாக குழாய்கள் மூலம் போர்வெல் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.இதனால் சில நாட்களில் குளம் முழுமையாக நிரம்ப உள்ளது.
அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடுகள் இல்லை: தெப்ப உற்சவத்திற்கு கோயிலும் குளமும் தயாராக உள்ள நிலையில், அடிப்படை வசதிகள் துவங்கப்படவில்லை.தெப்பம் மார்ச் 2ல் என்றாலும் உற்சவம் துவங்கிய சில நாட்களிலேயே பக்தர்கள் வருகை துவங்கி விடும். பெண்கள் குளக்கரையில் தீபம்ஏற்றி வழிபடத்துவங்கி விடுவார்கள். ஆனால் குளத்து நீரில் கழிவுகளை அகற்றவும்,குளக்கரைகளை பராமரிக்கவும், சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தும் பணிகளும் துவக்கப்படவில்லை. விபத்துக்களைத் தவிர்க்க தீபம் ஏற்ற போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். குளத்தின் வடக்குகரையையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். லட்சக்கணக்கில் பக்தர்கள் வரும் இந்த உற்சவத்திற்கு தேவையான குடிநீர், கழிப்பறை இரண்டுமே போதுமானதாக இருந்ததில்லை. மொபைல் டாய்லட்கள், உடைமாற்றும் அறைகள் பரவலாக ஏற்படுத்த வேண்டும். குடிநீர் வசதி மேம்படுத்த வேண்டும்.கடந்த ஆண்டு இளநீர்,குளிர்பானங்கள், தேனீர் விற்பனைக்கு கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.
தவிக்கும் பக்தர்கள்: கடந்த முறை சுமார் 2 கி.மீ.க்கு முன்னதாக திருப்புத்துார் ரோட்டில் பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு வெயிலில் பக்தர்கள் நடந்து வரும் அவலம் காணப்பட்டது. அதைத் தவிர்க்க தேவையான வசதி தேவை. குறைந்த கட்டணத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கும் தெப்பத்திற்கும் ஆட்டோ, வேன்கள் அனுமதிக்கலாம். வாகன நிறுத்தம் தெப்பக்குளக்கரைக்கு அருகாமையில் இருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைதவிர்க்கவும் தேவையான நடவடிக்கை அவசியம். கோடை வெயில் அதிகரிக்கும்நிலையில், தெப்ப குளத்திற்கு அருகாமையில் நிழற் கூடம் இல்லாமல் பக்தர்கள் தவிக்கின்றனர்.கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு நல்ல நிழற்கூரை அமைக்க வேண்டும்.இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய நிலையில் ஏற்பாடுகள் குறித்த திட்டமிடல் கூட்டம் இதுவரை நடக்கவில்லை. உற்சவம் துவங்க சில நாட்களுக்கு முன்பாக கூட்டம் நடைபெற்று, திட்டமிடல் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையே தற்போதும் காணப்படுகிறது.