பதிவு செய்த நாள்
16
பிப்
2018
10:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், சேதமடைந்த இரண்டாம் பிரகார துாண்கள் திறன் குறித்து, சென்னை, ஐ.ஐ.டி., கட்டட நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
ராமேஸ்வரம் கோவில், 11ம் நுாற்றாண்டில் உருவானது. இக்கோவிலின் இரண்டாம் பிரகாரம், 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 40 ஆண்டுக்கு முன், தெற்கு பகுதி பிரகாரத்தை அகற்றி, கருங்கல்லில் புதிய பிரகாரம், துாண்கள் அமைத்தனர். வடக்கு பகுதி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதன் திறன் குறித்து ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக்கழகத்தின், கட்டட பிரிவு நிபுணர்கள், நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர்.சேதமடைந்த இரண்டாம் பிரகாரம், துாண்களை ஆய்வு செய்து, புகைப்படம் எடுத்தனர். ஐ.ஐ.டி., நிபுணர்கள் கூறியதாவது:பழமையான கோவில்களின் பிரகாரம், துாண்கள், கட்டுமானத்தின் திறன் குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். ராமேஸ்வரம் கோவிலில் சேதமடைந்துள்ள இரண்டாம் பிரகாரம் மற்றும் துாண்களை ஆய்வு செய்துள்ளோம். இதுகுறித்த அறிக்கையை, மத்திய, மாநில அரசுக்கு அனுப்புவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.