பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
பல்லடம் : கோவில்களில், சிறப்பு தரிசனத்துக்கு, போலி நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதாக, அறநிலையத்துறைக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இதில், பட்டியலிடப்பட்ட, பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில்களில், விரைவாக, எளிதாக சுவாமி தரிசனம் செய்ய, கட்டணம் செத்தி. சிறப்பு நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு நுழைவுச்சீட்டுகளை, போலியாக வழங்கி, மோசடி நடப்பதாக, அறநிலையத் துறை மாநில கமிஷனருக்கு, பூசாரிகள் சங்கத்தின் சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பிரசித்தி பெற்ற கோவில்கள் சிலவற்றில், சிறப்பு நுழைவுச்சீட்டை போலியாக வழங்கி, மோசடி நடக்கிறது. விஷேச நாட்களில், இன்னும் அதிகமாக நடக்கிறது. இதனால் அரசுக்கு சேர வேண்டிய தொகை, வேறுசிலரின் கைகளுக்கு சென்றுவிடுகிறது. கோவில் களின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைய வாய்ப்பாக உள்ளது. இதை அறநிலையத்துறை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.