பதிவு செய்த நாள்
21
பிப்
2018
11:02
திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவஙகியது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி நேற்று விஸ்வகர்ம மகாஜன சபையினரால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட திருமாங்கல்யம், மஞ்சள்புடவை சாத்துதல் நடந்தது. குமரன் தெரு, சாம்பன்குல மகாசபையினரால் கோயிலில் பாலகொம்பு ஊன்றி கொடியேற்றம் நடந்தது. பெண்கள் தினமும் காலை, மாலையில் வேப்பிலை, மஞ்சள் நீர் சுமந்து கொடிமரத்தடியில் ஊற்றுவார்கள்.அக்னி சட்டி எடுப்போர், பூக்குழி, பொங்கல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்துவோர் கையில் மஞ்சள் காப்பு அணிந்தனர். காப்பு கட்டிய பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
பூக்குழி திருவிழா: அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 2 ம்தேதி 5 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். அன்று இரவு அம்மன் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மார்ச் 6 ல் தெப்ப உற்ஸவம் நடைபெறுகிறது. மண்டகப்படி நாட்களில் அம்மன் தசாவதாரம், பூச்சொரிதல், பூ அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். திருவிழா மார்ச் 6 ம் தேதி தெப்ப உற்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது. கொடியேற்ற விழாவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன், பரம்பரை அறங்காவலர்கள் பாலசுந்தரம், கோபாலன், பாலகுரு, கணேசன், மகாலட்சுமி, சுபாஷினி, கண்ணன் பங்கேற்றனர்.