பழநி, பழநி மாரியம்மன்கோயில், மாசித்திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழாவும் நடந்தது. பழநி மாரியம்மன்கோயில் மாசித்திருவிழா பிப்.,9ல் துவங்கி மார்ச் 1 வரை நடக்கிறது. இதில் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு அதற்கு புனித நீர், பால் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு மாரியம்மன் சன்னதியிலுள்ள கொடிமரத்திற்கு அபிஷேக பூஜைகள் செய்து இரவு கொடியேற்றம் நடந்தது. திருக்கம்பத்தில் பூவோடுவைத்து (தீச்சட்டிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்குமேல் தங்கமயில் வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அடிவாரம் அழகுநாச்சியம்மனுக்கு காலை 9மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடக்கிறது. மாரியம்மன் கோயிலில் பிப்.,27ல் திருக்கல்யாணம், பிப்.,28ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.