சிவகங்கை: சிவகங்கை அருகே 9 ம் நுாற்றாண்டு வட்டெழுத்துகள் எழுதப்பட்ட மடை கண்டறியப்பட்டது.நாமனுார் நாமனிக் கண்மாயின் கிழக்கு பகுதியில் பழமையான மடை உள்ளது. இந்த மடையின் இருபுறமுள்ள கற்கள் 13 அடி உயரமுடையவை. அவற்றின் மேற்புறத்தில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன.அவற்றை புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் கழகத் தலைவர் கரு.ராசேந்திரன், சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி ஆகியோர் படியெடுத்தனர்.அவர்கள் கூறியதாவது: இந்த மடை கற்களில் எழுதப்பட்ட வட்டெழுத்துகள் 9 ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. அதில் ’ஸ்ரீஅவநி சுவரன் பெருமடை’ என எழுதப்பட்டுள்ளது. ’அவநிசுவரன்’ என்ற பெயர் பாண்டிய மன்னன் முதலாம் வரகுணபாண்டியனின் மகன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவனின் பட்டப்பெயர். அவர் பெருமடையை விவசாயிகளுக்காக ஏற்படுத்தி கொடுத்துள்ளார். மேலும் இப்பகுதியில் விவசாயம் செழித்தோங்கி இருந்துள்ளது. இக்கண்மாய் மூலம் பல நுாறு ஏக்கர் பாசன வசதி பெற்றுள்ளன, என்றனர்.ஏற்கனவே இக்கண்மாயின் வடக்கு பகுதியில் கி.மு., மூன்றாம் நுாற்றாண்டைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வெள்ளைநிற கல்வட்டங்கள் காணப்படுகின்றன.