பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில், ஒன்றரை அடி உயரமுள்ள நடராஜர் சிலையை, வருவாய் துறையினர் மீட்டு, கருவூகலத்தில் ஒப்படைத்தனர். திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், ஐந்து திருச்சபைகளில் முதற்சபையாக விளக்கும் ரத்தின சபையாகும். இக்கோவிலில், ஆருத்ரா அபிஷேகம், சிவராத்திரி மற்றும் கார்த்திகை மாத தெப்பம் போன்ற முக்கிய விழாக்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். இந்நிலையில், நேற்று மாலை, 3:30 மணிக்கு, திருவாலங்காடு, பெரிய தெருவைச் சேர்ந்த சின்ன சாமி மகன் கிருஷ்டப்ப ஆச்சாரி என்ற பக்தர், கோவில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது, குளத்தில் ஒரு சிலை இருந்ததை பார்த்து, வெளியே எடுத்தார். அது, ஒன்றரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை. தகவலறிந்து, திருத்தணி தாசில்தார், நரசிம்மன், திருவாலங்காடு இன்ஸ்பெக்டர், ருக்மாங்கதன் மற்றும் கோவில் ஊழியர்கள் சிலையை மீட்டனர். தாசில்தார், நரசிம்மன், நடராஜர் சிலையை பாதுகாப்புடன், திருத்தணி கருவூலகத்தில் ஒப்படைத்தார். நடராஜர் சிலை, ஐம்பொன் சிலையா, செம்பால் செய்யப்பட்ட சிலையா என, அதிகாரபூர்வமாக தெரியவில்லை. நடராஜர் சிலை குளத்திற்குள் எப்படி வந்தது, ஐம்பொன் சிலையா, செம்பால் செய்யப்பட்ட சிலையா என்பது குறித்து, இந்து அறநிலை துறையினர், இன்று விசாரணை நடத்துவர் என, எதிர் பார்க்கப்படுகிறது.