பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
மதுரை, ’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, கோயிலுக்கென தனி தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். கோயிலுக்குள் நவீன தீத்தடுப்பு கருவிகளை அமைத்து, ஊழியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்க வேண்டும்,’ என, அரசுக்கு தீயணைப்பு துறை பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து நவீன தீயணைப்பு கருவிகளை பொருத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோயிலில் பிப்.,2 ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்தது. 30 கடைகள் எரிந்தன. எதிர்காலத்தில் தீ விபத்தில் இருந்து கோயிலை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என தீயணைப்பு மண்டல துணை இயக்குனர் சரவணக்குமார், கோட்ட அலுவலர்(பொறுப்பு) சுப்பிரமணியன் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், போதிய தீயணைப்பு கருவிகள் இல்லாததே காரணம் என தெரிவித்தது. அதேநேரம் கோயிலில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என தீயணைப்பு துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கோயிலுக்கென தனி தீயணைப்பு நிலையம், அதற்குரிய ஆட்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அரசு ஒப்புதல் தரும்பட்சத்தில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டடத்தின் ஒரு பகுதியில் தீயணைப்பு நிலையம் செயல்படும். ஸ்டேஷன் அலுவலர் தினமும் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்வார். மேலும், கோயில் வளாகத்தில் நவீன தீத்தடுப்பு கருவிகளை பொருத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டாம், மூன்றாம் பிரகாரங்களில் கருவிகள் பொருத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அக்கருவிகளை அவசர காலத்தில் பயன்படுத்த கோயில் ஊழியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.