பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் புதிய உற்சவர் சிலை வருவதற்கு, பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த ஆண்டும், அமரேஸ்வரர் கோவிலில் மாசி மகம் உற்சவம் நடைபெறாது என, உபயதாரர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், நிமந்தகார ஒற்றைவாடைத் தெருவில், பழமையான அமரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மாசி மாதந்தோறும் வரும் பவுர்ணமியன்று, மாசி மகம் உற்சவம் விமரிசையாக நடைபெறும். அப்போது, ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாள், காலையில் ஊர்வலமாக சென்று, அமரேஸ்வரர் கோவிலில் எழுந்தருள்வர். அவர்களுக்கு, திருமஞ்சனம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இரவு மீண்டும் கோவிலுக்கு திரும்பி செல்வர்.
ஏகாம்பரநாதர் கோவில் பழைய உற்சவர் சிலை பழுது காரணமாக, புதிய சிலை செய்தனர். அதற்கு பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் புதிய சிலை செய்தனர். புதிய உற்சவர் சிலையை, அமரேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வர விரும்பாத, மாசி மகம் விழா குழுவினர், கடந்த ஆண்டு விழாவை நடத்தவில்லை. நடப்பாண்டும் புதிய உற்சவர் சிலை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழைய உற்சவர் சிலையை, ஜடிபந்தனம் செய்து, மாசி மகம் உற்சவத்திற்கு பயன்படுத்த விரும்புவதாகவும், அதற்கான செலவை உபயதாரர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். பழைய சிலையை உற்சவத்திற்கு பயன்படுத்த முடியாது என, கோவில் செயல் அலுவலர் கூறியதால், இந்த ஆண்டும் அமரேஸ்வரர் கோவிலில், மாசி மகம் உற்சவம் நடைபெறாது என, உபயதாரர்களில் ஒருவரான ரகு கூறினார்.