பதிவு செய்த நாள்
21
பிப்
2018
04:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் ஐந்து கொடிமரங்களில் கொடியேற்றம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, மலர்களால் அலங்கரித்து, பகல் 11:45 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.
12:00 மணியளவில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், வன்னியடி பிரகாரத்திலுள்ள பிரதான கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. பின்னர், பிரதோஷநந்தி அருகிலுள்ள கொடிமரம், வன்னியடி பிரகாரத்திலுள்ள மற்ற மூன்று கொடிமரங்களிலும் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தினசரி பஞ்சமூர்த்திகள் விசேஷ வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. ஆறாம் நாள் திருவிழாவான 25ம் தேதி விபச்சித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐ தீக திருவிழா நடக்கிறது. 28 ம் தேதி அதிகாலை 5:15 மணி முதல் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி தீர்த்தவாரியும், 2ம் தேதி பகலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், இரவு புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம், 3ம் தேதி சண்டிகேஸ்வரர் வீதியுலாவுடன் 12 நாள் பெருவிழா முடிகிறது. அதேபோல், விருத்தாசலம் அடுத்த நல்லுார் வில்வவனேஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.