பதிவு செய்த நாள்
22
பிப்
2018
11:02
கோவில்களுக்கு, சீரான மின் சப்ளை செய்வதை உறுதி செய்வதற்காக, அறநிலைய துறையுடன் இணைந்து, அங்குள்ள மின் இணைப்பு மற்றும் மின் சாதனங்களை, மின் வாரியம் ஆய்வு செய்ய உள்ளது. மதுரை மாவட்டத்தில், உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில், இம்மாத துவக்கத்தில், தீ விபத்து ஏற்பட்டது. அதில், கோவிலுக்குள் இருந்த கடைகள், தீயில் எரிந்து நாசமாயின. இதையடுத்து, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை, அரசு முடுக்கி விட்டு உள்ளது.அதன்படி, அனைத்து கோவில்களிலும், மின் இணைப்பு மற்றும் மின் சாதனங்கள் சரியாக இருக்கிறதா என, மின் வாரியம் ஆய்வு செய்ய உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக, முதல்வர், பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், சமீபத்தில் ஆலோசித்தார். அப்போது, முதல் கட்டமாக, முதுநிலை அந்தஸ்து உடைய கோவில்களில், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக, உடனே ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனால், கோவில்களில் உள்ள மின் இணைப்பு மற்றும் மின் சாதனங்களை ஆய்வு செய்வது குறித்து, அறநிலைய துறையிடம் இருந்து, அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, அறநிலைய துறை மற்றும் சென்னை, கிண்டியில் உள்ள மின் ஆய்வு துறையுடன் இணைந்து, கோவில்களுக்கு மின்சாரம் வரும் மின் வழித்தடம், கோவிலில் உள்ள மின் இணைப்பு மற்றும் மின் வினியோக சாதனங்கள் ஆய்வு செய்யப்படும். அப்போது, பழுதான சாதனங்கள், ஆயுள் காலம் முடிந்தும், பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் அகற்றப்படும். அவற்றுக்கு பதிலாக, புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பான மற்றும் சீரான மின் சப்ளை உறுதி செய்யப்படும். இதற்கான பணிகள், விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -