காஞ்சிபுரம் : வேலுார் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில் சார்பில் செய்யப்பட்ட, புதிய ஸ்வர்ணலட்சுமி தங்க விக்ரஹம், நேற்று காஞ்சிபுரத்திற்கு ஊர்வலமாக வந்தது. வேலுார் அருகே அமைந்துள்ள லட்சுமி நாராயணி பொற்கோவில் சார்பில், 70 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வர்ணலட்சுமி விக்ரஹம் கரிகோல் விழா, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, புதிய உற்சவர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வேலுார் சத்துவாசாரி, ஆற்காடு வாலாஜாபேட்டை, ஓச்சேரி, மற்றும் வாலாஜாபாத் வழியாக சென்று, இரவு காஞ்சிபுரம் வந்தடைந்தது. அங்கு, ஸ்வர்ண லட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, லட்சுமி தேவியை வழிபட்டனர்.