பதிவு செய்த நாள்
23
பிப்
2018
11:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள, ஏகாம்பரநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் பிரகாரத்தில் நடக்கும் பக்தர்கள், தரை விரிப்புகள் இல்லாததால், சூடு தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சைவ, வைணவ கோவில்கள் நிறைந்த நகரமாக காஞ்சிபுரம் விளங்குகிறது. காஞ்சிக்கு சுற்றுலா வரும் பக்தர்கள், அதிகம் செல்லும் கோவில்களில், ஏகாம்பரநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்கின்றனர். இரு கோவில்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். வரதராஜ பெருமாள் கோவிலில், முகப்பு முதல் உட்பிரகாரம் வரை, அனைத்தும் கற்களால் ஆன தரை அமைக்கப்பட்டுள்ளது. ஏகாம்பரநாதர் கோவிலில், சிமென்ட் தரை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, காஞ்சிபுரம் நகரில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இரு கோவில்களிலும், சூடான தரையில் பக்தர்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது. குழந்தைகள், சிறுவர்கள், சூடு தாங்க முடியாமல், கோவிலுக்குள் ஓட்டம் பிடிக்கின்றனர். கோவில் பிரகாரம் முழுவதும் தரை விரிப்புகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.