பொள்ளாச்சி மாரியம்மன் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2018 10:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சியின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பொள்ளாச்சி நகரின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
கடந்த, 20ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. 27ம் தேதி இரவு கோவில் பூவோடு வைக்கப்பட்டது. இம்மாதம், 2ம் தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு பூவோடு எடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 3ம் தேதி காலை கோவிலில் கொடி கட்டப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி முதல் பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர். திருக்கல்யாணம் நிறைவடைந்ததை அடுத்து, மாரியம்மன் வெள்ளித் தேரோட்டத்துக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி துவங்கியது.