பதிவு செய்த நாள்
08
மார்
2018
11:03
சிவகங்கை: சிவகங்கை அருகே, கி.மு., 3 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த. பெருங்கற்கால கல்வட்டங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.கி.மு., 1000க்கு முன்பே, இறந்தோர் நினைவாக பெருங்கற்களை கொண்டு கல்லறை எழுப்பி வணங்கும் பழக்கம், இங்கு இருந்துள்ளது.
பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒருவகையாக, கல்வட்டம் உள்ளது. இதில், சவக்குழியின் மேற்பகுதி அடைக்கப்பட்டு, கற்கள் வட்டமாக அடுக்கப்பட்டிருக்கும். சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை என்ற இடத்தில், கீழப்பூங்குடி சாலையில் 100 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவை, கி.மு., 5 முதல், கி.மு., 3 ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. பாதி கல்வட்டங்கள், மண்ணில் புதைந்தும், சேதப்பட்டும் காணப்படுகின்றன. இதனை ஆய்வு செய்த, தொல்லியல் ஆய்வாளர், திருமலை அய்யனார் கூறுகையில், இதுபோன்ற கல்வட்டங்கள், திருமலை சுற்று பகுதிகளில் காணப்படுகின்றன. ஏற்கனவே, நாமனுார் கண்மாயில் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டன. அதேபோல் அலவாக்கோட்டை பகுதியிலும் காணப்படுகின்றன. இந்த பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.