சிலர் பசுத்தோல் போர்த்திய புலிகளாய் இருப்பர். அதாவது மற்றவர்களிடம், “நல்லவனாய் இரு. நாலு பேருக்கு நன்மை செய், தர்மம் செய், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே, பிற பெண்களைப் பார்க்காதே!” என்றெல்லாம் சொல்வர். நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று மேடைகளில் முழங்கி விட்டு, மக்களின் பணத்தை சூறையாடி கொண்டிருப்பர். இவர்களுக்கு என்ன கதி வரும் என்பதை குர்ஆன் தெளிவாக சொல்கிறது. “ஒரு மனிதன் இறுதித்தீர்ப்பு நாளில் கொண்டு வரப்பட்டு நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். அக்குடலை எடுத்துக் கொண்டு, செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தைச் சுற்றுவான். இதைப்பார்த்து மற்ற நரகவாசிகள் ஒன்று கூடி அவனிடம், “உனக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? நீ நன்மைகள் புரியும்படி உலகில் எங்களுக்கு போதித்துக் கொண்டு தானே இருந்தாய்? தீமை செய்யாதே என்று சொல்லி எங்களை தடுத்து கொண்டிருந்தாயே! நற்செயல்களைப்புரிந்தும் நீ ஏன் இங்கே வந்தாய்?” என்று கேட்பார்கள்.
அதற்கு அந்த மனிதன், “நான் உங்களுக்கு நன்மை புரியும்படி போதித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் நானோ அதன் அருகில் கூட செல்லவில்லை. தீமைகளை விட்டு விடும்படி உங்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நானோ அந்தத் தீமைகளை புரிந்து கொண்டிருந்தேன்,” என்று பதிலளிப்பான். ஊருக்கு உபதேசம் செய்பவன், முதலில் தன்னை மாற்றி கொள்ள வேண்டும் என்பதை உணர்வது நல்லது.