பதிவு செய்த நாள்
13
மார்
2018
11:03
காஞ்சிபுரம்;விஜய நகர பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த சிலைகள், காஞ்சிபுரத்தில்இருந்து திருடப்பட்டு, அமெரிக்காவில் இருப்பதாகவும், அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்,மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர், பொன்னையா தலைமையில், நேற்று காலை, 11:00 மணிக்கு நடைபெற்றது.அதில், காஞ்சிபுரத்தைச்சேர்ந்த, டில்லி பாபு என்பவர் கொடுத்த மனு: தொன்மை வாய்ந்த, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்கோவிலுக்கு, 1509ல், விஜய நகர பேரரசு மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், 10 சிலைகள் நன்கொடையாக வழங்கியதாக, வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.அவர் வழங்கிய சோமாஸ்கந்தர் சிலை மற்றும் அதன் தொடர்பு உடைய சிலைகள் கோவிலிலிருந்து கடத்தப்பட்டு, அமெரிக்காவில் உள்ள, ’ஏசியன்’ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, இந்த சிலைகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக, சிலையிலேயே தெலுங்கில் பொறிக்கப்பட்டுள்ளன.பல்வேறு மன்னர் காலத்தில் கோவிலுக்கு வழங்கப்பட்ட, வைரம், வைடூரியம், பவளம், மாணிக்கம் பதித்த நகைகளும், இரட்டை திருமாளிகையின் அருகேயுள்ள சன்னதியிலிருந்து கடத்தப்பட்ட, 10க்கும் மேற்பட்ட கற்சிலைகளும் வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளன. அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்க வேண்டும்; கடத்த உதவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.