பதிவு செய்த நாள்
13
மார்
2018
01:03
கூடலுார் : கூடலுார் ஆமைக்குளம் பகுதியில் நள்ளிரவில் நடந்த ’காமன் பண்டிகை’ திருவிழாவை, மக்கள் கண்விழித்து ரசித்தனர். கூடலுார் பகுதியில், ’காமன் பண்டிகை’ திருவிழா ஆண்டுதோறும் பாரம்பரியம் மாறாமல், நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா, கடந்த மாதம் 20ல் துவங்கியது. தொடர்ந்து, ரதி - மன்மதன் வேடமிட்டவர்கள், தினமும் இரவில் வீடு, வீடாக சென்று ஆடி வந்தனர். இதன், இறுதி நிகழ்வான, ’காமன் பண்டிகை’ நடந்தது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு ரதி - மன்மதன் சிறப்பு முன்னோட்ட ஆட்ட நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு, விநாயகர் கோவிலிருந்து, ’வில்’ பாலித்து, படத்தேர் ஊர்வலமும் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.நள்ளிரவு, 1:00 மணிக்கு ரதி - மன்மதன் திருமணம் மற்றும் தொடர்ந்து மொய் விருந்து உபச்சார நிகழ்ச்சி; ரதி - மன்மதன் நடனம், ஊர்வலம் ஆகியவை நடந்தன. 2:00 மணிக்கு மணிக்கு, துாதுவன் வருகை; 3:00 மணிக்கு ரதி - மன்மதனுக்கு வில் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை, 3:00 மணிக்கு தட்சன் யாகம் நிகழ்ச்சி; 4:00 மணிக்கு யாகமளிக்க விநாயகர் வருகை; 4:30 மணிக்கு ஆகோதர வீரபுத்திரன் வருகை; 5:00 மணிக்கு தட்சன் வதைபடும் நிகழ்ச்சி; காலன் சங்கிலியுடன் எமதர்மன் வருகை நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது. அதிகாலை, 5:30 தவத்தை கலைத்த மன்மதனை, சிவனின் நெற்றி கண் மூலம், எரியூட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை, திரளான பெண்கள், குழந்தைகள் நள்ளிரவிலும் கண் விழித்து ரசித்தனர்.