பிறர் நலன் பேணும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
ராசிக்கு 10-ல் புதனும், சூரியனும் இணைந்திருப்பதும், மார்ச் 26- க்கு பிறகு சுக்கிரன் 11ம் இடத்தில் இருப்பதும் மிகவும் சிறப்பான நன்மை தரும். ஏப். 10- முதல் குரு வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். அதன் பின் அவரால் நற்பலன் கிடைக்கும். மற்ற கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற இடங்களில் இருந்தாலும் பாதகமில்லை. திட்டமிட்ட முயற்சி அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
குடும்பத்தின் தேவை குறைவின்றி பூர்த்தியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். கணவன், -மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமண தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மார்ச் 26-க்கு பிறகு பணவரவு அதிகரிக்கும். மார்ச் 24,25ல் சகோதர வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம். விருந்து, விழாவிற்கு அடிக்கடி சென்று வரலாம். மார்ச் 20,21- ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். மனம் போல ஆடம்பர பொருள் வாங்கலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். எதிர்பார்த்த புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். மார்ச் 28,29- ல் பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். ஏப். 7,8- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும். ஏப்.10- முதல் 5-ம் இடத்தில் இருக்கும் குருபகவானால் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல மணவாழ்வு கைகூடும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல வளர்ச்சி எதிர்பார்க்கலாம். புதிய தொழில் நல்ல அனுகூலத்தை கொடுக்கும். எதிரிகளின் இடையூறு, இருக்கும் இடம் தெரியாமல் மறையும். புதனால் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை அளிக்கும். ஏப்.4,5,6 ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ராகுவால் திடீர் திடீர் செலவு, வீண் விரயம் ஏற்படலாம். ஏப். 10- க்கு பிறகு லாபம் சிறப்பாக இருக்கும்.
பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விண்ணப்பித்த கோரிக்கை விரைவில் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். இடமாற்ற பீதி இனி இருக்காது. புதன் சாதகமாக இருப்பதால், எந்தகைய வேலைப்பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. மார்ச் 18,19- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிரிகள் வகையில் இருந்த தொல்லை, அவப்பெயர், போட்டிகள் முதலியன மார்ச் 26-க்கு பிறகு மறையும். அதன் பின் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறலாம். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க பெறுவர்.
மாணவர்களுக்கு புதன் சாதகமான இடத்தில் உள்ளதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஏப்.10- முதல் குருபகவான் சாதகமாக காணப்படுவதால் தேர்வி்ல் அதிக மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.
விவசாயிகள் பொருளாதார வளம் காணலாம். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். நெல்,மஞ்சள், சோளம், கிழங்கு போன்றவற்றில் கூடுதல் வருமானம் வரும். கால்நடை மூலம் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் திட்டத்தில் தாமதம் உண்டாகும்.