பதிவு செய்த நாள்
14
மார்
2018
01:03
கோவை : அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டு ஜூன் 29ல் துவங்கி, ஆக., 26ம் தேதி வரை நடக்கிறது. பல்தல் மற்றும் பகல்காம் வழியாக மேற்கொள்ளப்படும், இந்த யாத்திரைக்கு முன்பதிவு செய்வது அவசியம். மேலும், அங்கீகரிக்கப்பட்ட டாக்டர், தனியார் மருத்துவமனைகளால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச், 1ம் தேதி முதல் இச்சான்றிதழ் வழங்குவதற்கான முகாம்கள் நடந்து வருகின்றன. இத்தேதிக்கு பின் வழங்கப்படும் சுகாதார சன்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது சான்றிதழ் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள, 20 மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மருத்தவமனை இருப்பிட மருத்துவ அலுவலர்கள் அதற்கான பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் கூறுகையில், ”கோவை மண்டலத்தை பொறுத்தவரை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியை சேர்ந்தவர்கள் சுகாதார சான்றிதழுக்காக இங்கு வருகின்றனர். ரத்த அழுத்தம், இ.சி.ஜி., மலையேறுவதில் பயிற்சி உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம் யாத்திரைக்கு செல்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுவரை, 75 பேருக்கு இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.