சிவகங்கை அருகே புதைந்து போன 10ம் நூற்றாண்டு சிவன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2018 12:03
சிவகங்கை:சிவகங்கை அருகே 10 ம் நுாற்றாண்டு சிவன் கோயில் புதைந்துள்ளது தெரியவந்துள்ளது. அலவாக்கோட்டை அலவாக் கண்மாயின் தென்திசையில் தோப்பு விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் முன் 5 அடி உயரமுள்ள சூலம் பொறிக்கப்பட்ட 13 ம் நுாற்றாண்டு கல்வெட்டு, 18 ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் உள்ளன. அதனை புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் கழகத்தலைவர் ராசேந்திரன், தொல்லியல் ஆய்வாளர் திருமலை அய்யனார் ஆகியோர் படி எடுத்தனர்.அவர்கள் கூறியதாவது: இந்த கல்வெட்டுகளில் ”நாயத்துக்கு விளாகம் சோழ... தேவர் திருநாமத்திற்கு காணி அழகிய பாண்டிய புரத்துக்களவழி,” ”அருமொழி நாதருக்கு சசிவர்ணத்தேவர் கல்நாட்டி விட்ட ஆபரணநல்லுார்,” ”விட்ட மதித்து ராய வீரபாண்டி நாட்டு சோழ மூவேந்த வேளான் மகன் ஸ்ரீராம மூவேந்த வேளான்,” ஆகிய மூன்று வாசகங்கள் உள்ளன.
மேலும் பலி பீடம், இடிந்த மகா பத்மம், கோயில் கற்கள் காணப்படுகின்றன. அங்கு இரண்டு விநாயகர் சிலைகளை வைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் ஒன்று 10 ம் நுாற்றாண்டையும், மற்றொன்று 13 ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது.இதன்மூலம் இப்பகுதியில் 10 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் இருந்துள்ளது உறுதியாகிறது. சோழபுரம் கோயில் அம்மனுக்கான அணிகலன்கள், ஆபரணங்கள் செய்ததற்காக அந்த ஊரில் 100 க்கும் மேற்பட்ட பொற்கொல்லர்களை தங்க வைத்துள்ளார். இதனால் அப்பகுதி ஆபரணநல்லுார் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. பொற்கொல்லர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. இப்பகுதியை தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும், என்றனர்.