பதிவு செய்த நாள்
16
மார்
2018
01:03
தேனி;தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, என, தேனி கலெக்டர் எம்.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திருவிழா ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது: கண்ணகி கோயிலில் சித்ராபவுர்ணமி விழா ஏப்.,29ல் நடத்தப்படுகிறது. பக்தர்களுக்காக போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், அசம்பாவிதத்தை தடுக்கவும் குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் 6 சோதனை மையங்கள் அமைக்கப்படும். கூடுதலாக 4 சோதனை மையங்கள் அமைத்து, அதில் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, அவற்றின் உறுதித்தன்மை சோதித்து அதற்கான சான்றிதழ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மருத்துவம், கழிப்பிடம், பாதை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை வனத்துறை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக சத்தத்தை உண்டாக்கும் ஒலிபெருக்கி, ஜெனரேட்டர், பட்டாசுகள், வெடி பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் சிலைகள் கொண்டு செல்லவும், விளம்பர துண்டு பிரசுரங்களை வினியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்ல, கண்ணகி கோயில் உட்பிரகாரம், வெளிப்பகுதிகள், வனப்பகுதிகளில் முடிகாணிக்கை செலுத்த, வனப்பகுதிக்குள் புகைப்படம் மற்றும் வீடியோ, ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார். பாஸ்கரன் எஸ்.பி., அதிகாரிகள் பங்கேற்றனர்.