பதிவு செய்த நாள்
19
மார்
2018
11:03
திருப்பூர் : யுகாதி பண்டிகையை முன்னிட்டு, அவிநாசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, திருப்பூர் சுற்றுப்பகுதி விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி பண்டிகை, தமிழகத்திலும் கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பு போலவே, யுகாதி பண்டிகையன்று, கிராம மக்கள் விநாயகர் வழிபாடு நடத்துகின்றனர்.இதை முன்னிட்டு நேற்று, அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் மற்றும் பால் குடங்கள் எடுத்து வரப்பட்டன. திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதற்காக, வேப்பம்பூ கலந்த பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டிருந்தது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள, காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று, கொடுமுடியில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தத்தில் சிறப்பு அபிேஷம், சிவபெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வாலிபாளையம் சடையப்பன் கோவிலில், பக்தர்கள் பூச்சட்டி எடுத்தும், தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். டவுன் ஹால் செல்வ விநாயகர், எஸ்.ஆர்., நகர் ரத்தின விநாயகர் கோவில், குமாரவிநாயகர் கோவில், ராஜவிநாயகர் கோவில்களில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல், பல்லடம் பனப்பாளையம் மாரியம்மன் கோவிலில், தீர்த்த அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது.