பதிவு செய்த நாள்
02
ஜன
2012
12:01
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்கப்பெருமான் கோவில் உள்ளது. இங்கு புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மைக்காக நட்சத்திர மகாயாகம் நேற்று நடந்தது. பிரம்மஹத்தி தோஷம், சித்த பிரம்மை ஆகிய குறைபாடுகளை நீக்கக்கூடிய மகாலிங்கசுவாமிகோவிலில் மட்டுமே, ஒரே மண்டபத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளது சிறப்பாகும். இந்த மண்டபத்தில் நடுநாயகராக குருதட்சிணாமூர்த்தி அமைந்திருக்க இருபுறமும் வரிசையாக நட்சத்திர லிங்கங்கள் உள்ளது. நட்சத்திர மகாயாகத்துக்காக பிரமாண்டமான யாகசாலை இந்த மண்டபத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டு, 27 நட்சத்திர தேவதைகளுக்கும் வேதிகை அமைத்து, அவற்றின் முன்னே நட்சத்திர வடிவிலான வேள்வி குண்டங்கள் ஒரே வரிசையில் அமைக்கப்பட்டது. உலக மக்களின் நன்மைக்காக நடத்தப்படும் நட்சத்திர மகா யாகம், திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அருளாசியுடன் மதியம் துவங்கியது. பக்தர்கள் அந்தந்த நட்சத்திர ஹோமகுண்டம் எதிரில் அமர்ந்து சங்கல்பம் செய்து யாகத்தை கண்டு, தங்கள் நட்சத்திர தேவதையை வேண்டிக்கொண்டு அருள்பெற்றனர். யாகம் முடிந்து 27 நட்சத்திரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திருவெண்காடு சுவாமிநாத சிவாச்சாரியார், கண்ணப்பா சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் ஸ்தானிகர் தண்டபாணி சிவாச்சாரியார், சந்திரசேகர சிவாச்சாரியாருடன் 60 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். மகாநட்சத்திர யாக ஏற்பாடுகளை ஆலய கண்காணிப்பாளர் சுவாமிநாதன், சண்முகபாஸ்கரன், பொறியாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் மகாயாகத்தை ஒருங்கிணைந்து நடத்தும் கோவை கோடி புண்ணிய கைங்கர்ய அறக்கட்டளை எழுத்தாளர் மயன் ஆகியோர் செய்திருந்தனர்.