செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேல்மலையனுார் தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவுஅமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை வினாயகர், பெரியாழி அம்மன், அங்காளம்மனுக்குசிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு அன்னதானமும், 8 மணிக்கு சிறப்பு பட்டி மன்றம் நடந்தது. இரவு 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் அறங்காவலர் புண்ணியமூர்த்தி, விழாக் குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.