உளுந்துார்பேட்டை: பாதுார் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுார் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில் பங்குனி அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் ஆசியுடன் 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்ப்பிக்கப்பட்டது. பின்னர் யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்கள் உள்ளிட்டவை சேர்ப்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பழ வகைகள், பால், தயிர், நெய் ஆகியன யாக குண்டத்தில் சேர்ப்பித்தனர். ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.