பதிவு செய்த நாள்
20
மார்
2018
11:03
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டார கோவில்களில், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பாலமலை அரங்கநாதர் கோவில், காளிபாளையம் திருமலைராய பெருமாள் திருக்கோவில், பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவில், இடிகரை பள்ளி கொண்ட ரங்கநாதர் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், சிறப்பு திருமஞ்சனத்திற்கு பின், உற்சவமூர்த்தி கருடவாகனத்தில் எழுந்தருளினார். பின்னர், மங்கள வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில், பட்டாளம்மன் கோவில், மாகாளியம்மன், வீரபாண்டி மாரியம்மன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வாழைப்பழம், பொட்டுக்கடலை, கரும்பு சர்க்கரை அபிஷேகம் செய்து, அதில் வேப்பம்பூவை சேர்த்து பெருமாளுக்கு படையலிட்டு வணங்கினர்.