கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்!* கண்களில் அன்பு இருந்தால் மட்டுமே கற்சிலையில் தெய்வத்தை தரிசிக்க முடியும். உள்ளத்தில் அன்புள்ளவர்கள் எல்லா உயிர்களையும் கடவுளாகவே கருதுவர். * உலகில் காண்பதெல்லாம் முதலில் அழகாக தெரியும். ஆனால் அறிவுக்கண்ணை திறந்து பார்த்தால் உண்மை புரியும். * இருப்பதை கொண்டு வாழ தெரிந்தவனுக்கே அமைதி, தன் வாசலை திறக்கும். அந்த வாசலை அடைந்தவர்கள் மேலான வாழ்வை எட்டி விட்டனர் என்பது பொருள். * மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே உயர்ந்தவன். எது வந்தாலும் மகிழ்வுடன் ஏற்று வாழ்க்கையை திறம்பட அவனால் நடத்த முடியும். * தீய ஆசைகளை நீக்கினால், பரபரப்பு, பதட்டம் உண்டாகாது. எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம். * அறியாமை போல் துன்பம் தருவது வேறில்லை. அறியாமையுடன் இருக்கும் மனிதன் மதிப்பு இழந்து கீழான நிலையை அடைவான். * கீழ்குணம் படைத்த மனிதர்கள், சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், பொருட்களைச் சேர்ப்பதிலும் வீணாக காலத்தை கடத்துகிறார்கள். * நடுநிலை தவறாதவன் இன்பத்தை கண்டு துள்ளவோ, துன்பத்தை கண்டு துவளவோ மாட்டான். * சாந்தமே ஒருவனுக்கு பேரழகு தரும். ஏனெனில் அது தான் குணத்தில் உயர்ந்து விளங்குகின்றது. * அறிவு என்னும் சிங்கம், மனதில் உண்டாகும் காட்டு யானை போன்ற பெருந்தவறை கூட கிழித்து எறிந்து விடும். * தீயவர்களை விட்டு விலகு. அவர்கள் காற்று கூட நம்மை தீண்டாமல் பார்த்து கொள்வது அவசியம். * சத்தியத்தை தேர்ந் தெடுப்பவன் முதலில் புறக்கணிப்பது பொய் தான். அது இருந்தால் சத்தியத்தின் நிழல் கூட உன் மீது விழாது. * நல்லவர்களின் நட்பே உண்மையான செல்வம். அதுவே எல்லா நன்மைகளையும் வாரி வழங்கும்.