பதிவு செய்த நாள்
21
மார்
2018
11:03
திருமுருகன்பூண்டி: திருமுருகநாத சுவாமி கோவிலில், சூரிய அஸ்தமனத்தின் போது, மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நேற்று நடந்தது. அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில், ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல், பழமையான, திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது. சூரசம்ஹாரம் செய்ததில், முருகப்பெருமானுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால், நல்லாற்றின் கரையில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, வழிபட்டு தோஷம் நீங்கியதாக, தல வரலாறு உள்ளது. மேலும், சுந்தரர் வேடுபறி திருவிளையாடல் நடந்த தலமாகவும், மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவாலயம், கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றாகவும் பிரசித்தி பெற்றது. புராதானமிக்க கோவில் என்பதால், மத்திய தொல்லியல் துறையின் கீழ் கோவில் உள்ளது.
நில மட்டத்திலிருந்து தாழ்வாக அமைந்துள்ள இக்கோவில், சில்ப சாஸ்திரம் மற்றும் சோழர் கால கட்டடக்கலையில் கட்டப்பட்டது. உத்ராயண காலத்தில், பங்குனி மாத துவக்கத்தில், நான்கு நாட்கள், மாலை நேரத்தில், சூரிய அஸ்தமனத்தின் போது, மூலவரை வணங்கும் வகையில், லிங்கத்திருமேனி மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடக்கும். அவ்வகையில், நேற்று மாலை, 6:19 மணிக்கு சூரியனின் பொன்னிற ஒளி, நுழைவு கோபுரம் முதல், படிப்படியாக உள்ளே நுழைந்து, கொடிமரம், துவார பாலகர்கள், மகா மண்டபம், முன் மண்டபம் என பாய்ந்து, நிறைவாக கருவறையில் விழுந்தது. இதைப்பார்த்த பக்தர்கள், பரவசத்தில், ஓம் நமசிவாய என கோஷமிட்டனர்.
சிவாச்சார்யார்கள் கூறியதாவது: மீனம் (பங்குனி) மாதத்தின் முதல் வாரத்தில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சூரிய உதயத்தின் போது, மூலவர் மீது சூரிய ஒளி விழும். அதே போல், மேற்கு பார்த்த சிவாலயமாக அமைந்துள்ள திருமுருகன்பூண்டியில், சூரிய அஸ்தமனத்தின் போது சூரிய ஒளி விழும்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, வான சாஸ்திரம் துல்லியமாக கணிக்கப்பட்டு, கோவில் அமைக்கப்பட்டுள்ளது. வலது புறம் விழும் சூரிய ஒளி படிப்படியாக, நேர் கோட்டிற்கு வந்து, நான்கு நாட்கள் மூலவர் மீது ஒளி விழுந்து, பின் திசை மாறும். சூரிய பகவானே, திருமுருகநாதரை வணங்கும், அற்புத நிகழ்வு, இன்னும் நான்கு நாட்களுக்கு நடக்கும். இந்த வேளையில், பக்தர்கள் வழிபட்டால், பூர்வ ஜென்ம பாவம் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு, அவர்கள் கூறினர். -நமது நிருபர்-