பதிவு செய்த நாள்
22
மார்
2018
11:03
காரைக்குடி, காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் பால்குட பெருவிழா நேற்று நடந்தது. காரைக்குடியில் நகரமே விழாக்கோலம் பூணும் முக்கியமான விழா மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழாவாகும். கடந்த மார்ச் 13-ம் தேதி காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
நேற்று காலை 9:30 மணிக்கு திருக்கோயில் காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து
வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முத்தாலம்மன் கோயிலிலிருந்து பறவைக்காவடி, வேல்காவடி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 10:45 மணியளவில் கோயில் காவடி பூக்குழி இறங்க அதனை தொடர்ந்து ஏராளமான ஆண்கள், பெண்கள் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கினர். மாலை 4:00 மணிக்கு கரகம், மதுக்குடம், முளைப்பாரி புறப்பட்டு பருப்பூரணி கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும், இரவு 8:20 மணிக்கு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று, இரவு 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, நாளை சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.
பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு நகர மக்கள் மோர், அன்னதானம், குளிர்பானம், தர்பூசணி வழங்கினர். மத நல்லிணக்கமாக முஸ்லிம்களும் தர்பூசணி வழங்கினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆத்மநாதன், உமா மகேஸ்வரன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
தாமதமான பூக்குழி தடுமாறிய பக்தர்கள்: பூக்குழி இறங்கும் நேரம் காலை 9:30 மணி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 10:45 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பலர் சோர்வுக்குள்ளாகி பூக்குழிக்குள் ஓடிவர சிரமப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்தனர். வரும் ஆண்டுகளில் பூக்குழி இறங்கும் நேரத்தை வெயில் ஏறுவதற்கு முன்பு நிர்ணயிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட சேவை குழுவினர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை பார்க்காமல், பக்தர்களுக்கு இடையூறாக நின்றதால், போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.