பதிவு செய்த நாள்
22
மார்
2018
12:03
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா, இன்று(மார்.,22ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
10 நாட்கள் விழா : பிற்கால கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டு உள்ள, இக்கோவிலின் நான்கு புறமும் மாட வீதிகள், கோபுரங்கள், குளம் ஆகியவை உள்ளன. திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார், கபாலீஸ்வரர் மீது, தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். 16ம் நுாற்றாண்டில், போர்ச்சுக்கீசியர்கள், இந்த கோவிலை அழித்துவிட்டனர். பல நுாற்றாண்டுகளுக்கு பின், மயிலாப்பூரில் இந்த கோவில் கட்டப்பட்டது.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாத பெருவிழா, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. பத்து நாட்களுக்கு நடக்கும், இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, 31ம் தேதி வரை நடக்க உள்ளது. விழாவின் முதல் நாளான, இன்று அதிகாலை, 5:15 மணி முதல், 5:45 மணிக்குள், கொடியேற்ற விழா நடைபெற்றது. மார்ச், 24ல், அதிகார நந்தி காட்சி, திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழா நடக்கிறது. மார்ச், 26ல், வெள்விடை பெருவிழா காட்சி நடக்கிறது. அடுத்த நாள், பல்லக்கு விழா நடக்கிறது. பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான தேர் திருவிழா, மார்ச், 28ல் நடக்கிறது. அன்று அதிகாலை, 4:30 மணிக்கு, கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். காலை, 6:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அன்று, ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது.
தீர்த்த வாரி : மார்ச், 29ல், காலை, திருஞான சம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை, வெள்ளி விமானத்தில் இறைவன், அறுப்பத்து மூன்று நாயன்மார்களுடன் திரு காட்சி அருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு, சந்திரசேகரர் பார்வேட்டை நடக்கிறது.விழாவின் இறுதி நாளான, மார்ச், 31ம் தேதி தீர்த்தவாரி உற்சவம், புன்னை மரத்தடியில் சிவ வழிபாடு நடக்கிறது.அன்று மாலை, 6:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின், கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம் : மயிலாப்பூரில், 10 நாட்கள் நடக்க உள்ள பங்குனி பெருவிழாவில், பக்தர்கள் பாதுகாப்பிற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவில் இணை கமிஷனர், காவேரி தலைமையில் சென்னை மாநகராட்சி, காவல் துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பக்தர்களுக்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கிராம தேவதை பூஜை : பங்குனி உத்திர பெரு விழாவை முன்னிட்டு, கபாலீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட, கிராம தேவதையான கோலவிழியம்மனுக்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, சிறப்பு பூஜைநடந்தது. இதற்காக, கோலவிழியம்மன்கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து வரிசை எடுத்து வரப்பட்டது.பின், கோலவிழியம்மனுக்கு பொங்கல்வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.பின், கபாலீஸ்வரர் கோவில் சார்பில் பங்குனி பெருவிழாவிற்கான பத்திரிகை, கோலவிழியம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றிரவு, 9:00 மணிக்கு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் விநாயகர் உற்சவமும், வெள்ளி மூஷிக வாகன வீதியுலாவும் நடந்தது.