பதிவு செய்த நாள்
23
மார்
2018
11:03
திருவள்ளூர் : திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, உற்சவர் வாகன ராவணேஸ்வர அலங்காரத்தில், வீதியுலா வந்தார். திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, பிரம்மோற்சவ விழா, கடந்த 12ம் தேதி, விக்னேஸ்வரர் உற்சவத்துடன் துவங்கியது.தொடர்ந்து, காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான, நேற்று காலை, நடராஜர் அபிஷேகம், விமானம், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இரவு ராவணேஸ்வர வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்தார். அன்று இரவு, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. இன்று, காலை, மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.