பதிவு செய்த நாள்
23
மார்
2018
12:03
ஆர்.கே.பேட்டை : கஜகிரி, செங்கல்வராயன் மலைக்கோவிலில், நேற்று, பங்குனி மாத கிருத்திகை உற்சவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள், வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
யானை படுத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டதால், கஜகிரி என, பெயர் பெற்றது கஜகிரி மலை. இந்த மலையின் உச்சியில் அமைந்துள்ளது செங்கல்வராயன் மலைக்கோவில். நித்திய பூஜைகளுடன், மாதந்தோறும் கிருத்திகை உற்சவமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி கிருத்திகையில், தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், காவடி எடுத்து வந்து வழிபாடு செய்கின்றனர். மலை மீது மூன்று தீர்த்த குளங்கள் அமைந்துள்ளன. பங்குனி கிருத்திகை உற்சவம், நேற்று, கோலாகலமாக நடந்தது. காலை, 10:00 மணிக்கு, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை, நகரி, புதுப்பேட்டை, ஏகாம்பரகுப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை, குளக்கரை, சுப்ரமணிய சுவாமி கோவிலும், பங்குனி மாத கிருத்திகை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.