பதிவு செய்த நாள்
24
மார்
2018
11:03
திருப்பூர் : திருப்பூரில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், நீதிமன்ற தடையை மீறி, கட்டட பணிகள் நடந்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம், திருவேங்கடம் நகர் பகுதியில், நல்லூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான, 45 ஏக்கர் நிலம் உள்ளது.இதில், சர்வே எண், 165ல், 9.24 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டிய நிலையில், அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், வழக்கு முடி யும் வரை, உள்ளது, உள்ளபடி இருக்க வேண்டும் எனவும், புதிய கட்டுமானங்கள் மேற்கொள் ளக்கூடாது எனவும், கோர்ட் தடை உத்தரவு உள்ளது. இருப்பினும், கோர்ட் உத்தரவை மீறி, பலர் கட்டடம் கட்டி வருகின்றனர். இதையறிந்த அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர் சினி மற்றும் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று, புதிய கட்டடங்கள் கட்டக்கூடாது, என கூறினர்.
பொதுமக்கள் தரப்பில், வழக்கு நடந்து வரும் நிலையில், கோர்ட் உத்தரவையும் மீறி, ஏழு பேர் புதிதாக கட்டியுள்ளனர். எம். எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கோவில் நிலத்தில் கட்டடம் கட்டியுள்ளனர். இது விஷயத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும், என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையறிந்த திருப்பூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா தலைமையில் வந்தபோலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, கோர்ட் உத்தரவின்படி நடந்து கொள்ள வேண்டும், என அறிவுறுத்தினர். அதன்பின், கோவில் சார்பில், கோவிலுக்கு சொந்தமான நிலம். நீதிமன்ற உத்தரவுபடி, கட்டடங்கள் கட்டக்கூடாது, என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.