நமது மதத்தின் ஆதார நூல்களுள் மக்களிடையே பக்தியையும், ஆன்மிகக் கலாச்சாரத்தையும் கொண்டு சென்றதில் ஓர் ஈடிணையற்ற இடத்தை வகிப்பது ஸ்ரீமத் பகவத் கீதையாகும்.
மகாபாரதத்தின் மையப்பகுதியில், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு உபதேசிப்பதாக அமைந்துள்ளது. இந்த நூல் 18 அத்தியாயங்கள் 700 சுலோகங்கள் கொண்டது.
விதிக்கப்பட்ட கடமைகளை இறை அர்ப்பணமாகச் செய்து இறை அனுபூதியைப் பெறுவதே மனித வாழ்வின் லட்சியம் என்று உறுதியாகச் சொல்லும் இந்த நூல், அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மனக்கவலையோடு ஆரம்பிக்கிறது. அர்ஜுனனின் கேள்விகளுக்கு விடையளிக்கும் கிருஷ்ணர் பக்தி, சாங்கிய (ஞானம்), கர்ம, ராஜ யோகங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.
மூவகை மனிதர்கள், அவர்களின் குணங்கள் மற்றும் செயற்பாடுகள், ஆன்மிக லட்சியம், அதை அடையும் மார்க்கம், பரம்பொருளின் ஆற்றலும் தன்மையும் போன்ற கருத்துக்ளோடு, மனிதன் ஆன்மிக லட்சியத்தை நோக்கிச் செல்ல வேண்டிய பாதை, அதில் ஏற்படும் தடைகளும் பிரச்னைகளும், தடையை உடைத்தெறிந்து போராடும் வழி, இறைநிலையை அடைந்தவனின் இயல்புகள் என பல்வேறு ஆன்மிகப் பொக்கிஷங்களைத் தன்னுள்ளே அடக்கியுள்ளது.
இந்த முப்பெரும் ஆதார நூல்களுக்கும் சங்கரர் (அத்வைதம்) விளக்க உரை எழுதியுள்ளார்.
ராமானுஜரும் (விசிஷ்டாத்வைதம்), ஸ்ரீமத்வரும் (துவைதம்) குறிப்பிட்ட சில உபநிடதப் பகுதிகளுக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும் கீதைக்கும் விளக்க உரை எழுதியுள்ளார்.
எண்ணற்ற பல மகான்களும் கொள்கை விளக்க நூல்களாகிய விரிவுரைகள் பல எழுதியுள்ளார்.