நமது குழந்தைகள் வறுமையில் வாடக் கூடாது என்று நாயகம் கூறுகிறார். ஸஃஅத் இப்னு அபிவக்காஸ் என்பவர் நோயால் பாதிக்கப் பட்டிருந்த போது, நாயகம் பார்க்க வந்தார். “இறைதூதரே! நான் எந்த அளவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். என்னிடம் மிகுதமான சொத்து உள்ளது. எனது மகள் மட்டுமே எனது வாரிசு. மூன்றில் இருபாகத்தைக் தர்மமாக கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்.அதற்கு நபிகள், ‘வேண்டாம்’ என்றார். ‘நான் பாதியைக் கொடுக்கவா?”என்றார் அபிவக்காஸ். அதற்கும் ‘வேண்டாம்’ என்ற நாயகத்திடம், ‘மூன்றில் ஒரு பாகத்தைக் கொடுக்கலாமா?”என்று கேட்டார் அபிவக்காஸ். அதற்கு நபிகள், “சரி, மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய். அதுவும் அதிகமே. ஏனென்றால் நீ உனது வாரிசை வறுமையின் காரணமாக, பிறரிடம் கை ஏந்தும்படி விட்டுச் செல்வதை விட அவர்களை எல்லாம் நிறைந்த நிலையில் விட்டுச்செல்வது சிறந்த ஒரு செயலாகும்,” என்று கூறினார்.