பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
12:04
மயிலாப்பூர்: அறிவினால் வரும் லாபம், உன்னை விட்டு விலகாது, என, சங்கர ஜெயந்தி மஹோத்சவத்தில், நொச்சூர் வெங்கட்ராம சர்மா பேசினார். சென்னை, மயிலாப்பூர், சமஸ்கிருத கல்லுாரியில், சங்கர ஜெயந்தி மஹோத்சவம், நேற்று மாலை துவங்கியது. வரும், 20ம் தேதி வரை நடக்கிறது. நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கர மஹிமா என்ற தலைப்பில், நொச்சூர் வெங்கட்ராம சர்மா பேசியதாவது: ஆதிசங்கரர் என்கிற பேரை கேட்டாலே, அத்வைதம் என்கிற சப்தம் நமக்குள் வரும். அத்வைதம் என்றால், மவுனம் என்று பொருள்படும். குரு, மவுனமாக இருந்தாலும், அவரது பார்வையே ஞானத்தை தரும். பயிற்சி செய்யாமல் இருந்தால், இசை, நடனம், பாட்டு போய்விடும். ஆனால், ஞானம் நம்மை விட்டு போகவும் செய்யாது, வரவும் செய்யாது. அறிவினால் வரும் லாபம், உன்னை விட்டு விலகாது. ஒருவருக்கு பணம், பொருள், பதவி நிறைய கிடைப்பது தான், பகவான் கிருபை என, மக்கள் நினைக்கின்றனர். ஆனால், ஞானஉபதேசமே, பகவானின் கிருபை. சாந்தி, ஆனந்தம், நிறைவு தான் வாழ்வில் முக்கியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.