கடுமையான குளிர்காலம். ஒரு தாயும் அவரது ஏழு வயது மகளும் ரயிலை விட்டு இறங்கி பிளாட்பாரத்தில் நடந்து வந்தனர். முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கியபடி பிச்சை கேட்டார். அந்த தாய் சில நாணயங்களை, மகளிடம் கொடுத்து பிச்சை போட சொன்னார். அவள் “தாத்தா...” என அழைத்து அவரது கையில் கொடுத்து விட்டு புன்னகையுடன் நடந்தாள். சிறிது தூரம் சென்றதும் அவர்களை யாரோ பின்தொடர்வது போல தோன்றவும் திரும்பிப் பார்த்தனர். அந்த முதியவர் அவர்களுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றார். குழந்தையை பார்த்து வெள்ளந் தியாக சிரித்தார். தாய் பதட்டத்துடன் குழந்தையை பக்கத்தில் இழுத்து அணைத்தபடியே கேட்டார், “என்ன வேணும் உங்களுக்கு... எதுக்கு பின்னாடியே வர்றீங்க?” முதியவர் கண்கள் கலங்கியபடி, “அம்மா... நான் இங்க பத்து வருஷத்துக்கு மேல பிச்சை எடுக்குறேன். இது வரைக்கும் என்னை எந்த குழந்தையும் தாத்தானு கூப்பிட்டதில்லை. இந்த குழந்தை கூப்பிட்டுச்சா அதான் கண் கலங்கிட்டேன். கொஞ்ச நேரம் இந்த குழந்தை கூட இருக்கனும்ணு தோணுச்சா அதான் பின்னாடியே வந்துட்டேன். மன்னிச்சுருங்க மா...” என்று கூறி விட்டு திரும்பி நடந்தார்.
இதை கவனித்த குழந்தைக்கும் கண்கள் கலங்கின. அம்மாவை அண்ணாந்து பார்த்து விட்டு, முதியவரைப் பார்த்தாள். “தாத்தா...” என சத்தமாக கூப்பிட்டாள். அவர் புல்லரித்துப்போய் குழந்தையை திரும்பி பார்த்தார். குழந்தை வேகமாக ஓடிப்போய் அவரை கட்டிக் கொண்டது. அவரும் குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ அன்புக்காக ஏங்கும் உயிர்கள், நமது அன்றாட வாழ்க்கை எங்கும் பரவி இருக்கின்றன. அவர்களை கவனித்து, முடிந்த அளவு அன்பை பகிர்ந்தால் போதும். பூமியெங்கும் புன்னகை பூக்கள் பூக்கும்.