பதிவு செய்த நாள்
17
ஏப்
2018
12:04
ஆர்.கே.பேட்டை: யுத்த களத்தில் கவரவர்களை வெற்றி கொள்ள பாசுபத அஸ்திரம் அவசியம் என்பதை உணர்ந்த அர்ச்சுனன், அதை பெறுவதற்காக மேற்கொண்ட தபசு நிகழ்ச்சி, ஆர்.கே.பேட்டையில் நேற்று நடந்தது. ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்ச்சுனன் தபசு, நேற்று இரவு, நடந்தது.
கோவில் வளாகத்தில் நடப்பட்டிருந்த பனை மரத்தில் அமர்ந்து, அர்ச்சுனன் தபசு மேற்கொண்டார். இதற்காக, அர்ச்சுனன் வேடம் தரித்த தெருக்கூத்து கலைஞர், பக்தி சிரத்தையுடன் மேற்கொண்ட தவத்தின் போது, காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்களும் உடன், தவத்தில் ஈடுபட்டனர். இரவு, 7:00 மணியளவில், பக்தி பாடல்களை பாடியபடியே, மரத்தில் ஏற துவங்கிய அர்ச்சுனன், 8:00 மணியளவில், உச்சாணி கிளையை அடைந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தவ மேடையில் அமர்ந்து, கடும் தவத்தில் ஈடுபட்டார். தவத்தின் பயனாக, அவர் வேண்டிய பாசுபத அஸ்திரம் கிடைத்தது. அஸ்திரம் கிடைக்க பெற்ற அர்ச்சுனன், தன்னுடன் தவத்தில் இணைந்திருந்த பக்தர்களுக்கு, மலர்கள் மற்றும் பழங்களை பிரசாதமாக அள்ளி வீசினார். மரத்தடியில் காத்திருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அதை பெற முண்டியடித்து கொண்டனர்.