பதிவு செய்த நாள்
18
ஏப்
2018
12:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. முன்னதாக, மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதியில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்தனர். சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சரியாக இன்று காலை 10:05 - 10:29 மணிக்குள் சி்த்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி சிம்மவாகனத்திலும் பவனி வருகின்றனர்.
சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்க மதுரை விழாக்கோலம் பூண்டுஉள்ளது. ஏப்.,25 இரவு 7:40 - 8:04 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,26 மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், ஏப்., 27 காலை 9:05 - 9:29 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்.,28 காலை 6:30 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு குங்குமம் பாக்கெட்டுகள் மற்றும் இதர பொருட்களை கோயில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி ரசீது பெற்று கொள்ளலாம்.இதுதொடர்பாக தனி நபர், நிறுவனத்திடம் தொடர்பு கொள்ள வேண்டாம். யாரேனும் தனிப்பட்ட நபர்கள் அணுகினால் 0452 -234 9868 என்ற போனில் தகவல் தெரிவிக்கலாம், என கோயில் நிர்வாகம் தெரிவித்துஉள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.