திருநெல்வேலி: திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் முன் கல்லறை அமைக்க பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.திருநெல்வேலி ஜங்ஷன், மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்ட விநாயகர் கோயில் உள்ளது. ஐந்து நிலைகளுடன் ராஜகோபுரம், கொடிமரம், மூன்று பிரகாரங்கள் என 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த விநாயகர் கோயில் இது.
இங்குள்ள மூலவர், நீலவாணி அம்பாளை மடியில் தாங்கியிருப்பார்.பழமையான இக்கோயிலில் வழிபட்டால், திருமண தடைகள் நீங்கும், உறவு பலப்படும் என்பது நம்பிக்கை. 2016ல் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது ராஜகோபுரம் அருகே கல்லறை தோட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, உடலை புதைக்க வந்தபோது கோயில் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் புதைக்கப்படவில்லை. தற்போது காம்பவுண்ட் அமைக்கப்பட்டு கல்லறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கோயில் கமிட்டி உறுப்பினர் ரத்தினம் கூறியது: கோயிலுக்கு எதிர்புறம் உள்ள 8 சென்ட் நிலத்தை சிலர் வாங்கியுள்ளனர். அங்கு விவசாயம் மேற்கொள்ளலாம்.வீடு கட்டலாம், கல்லறை தோட்டம் ஏற்படுத்தக் கூடாது. அறநிலையத்துறையிடம் புகார் அளித்தோம். ஆனால் கண்டுகொள்ளவில்லை. கல்லறைக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், என்றார்.