பதிவு செய்த நாள்
18
ஏப்
2018
04:04
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், அட்சய திரிதியை முன்னிட்டு, ஒரே இடத்தில் பெருமாள்கள் சேவை சாதிக்கும், 12 கருடசேவை தரிசனம் கோலாகலமாக நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படுவது, 12 கருடசேவையும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும், 3 திதியான அட்சய திரிதியை தினத்தில், 12 வைணவ கோவில்களிலிருந்து, கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு, பெரிய தெருவில் காசிக்கடைகளுக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் எழுந்தருளி, ஒரே இடத்தில் மக்களுக்கு சேவை சாதிப்பர்கள். இவ்விழா இன்று காலை 7.25மணி முதல் பகல் 1 மணி வரை அலங்காரிக்கப்பட்டட பந்தலில், சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகபெருமாள், கிருஷ்ணசுவாமி, ராமசுவாமி, சந்தானகோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், வேணுகோபாலசுவாமி, வரதராஜபெருமாள், லஷ்மிநரசிம்ம சுவாமி ஆகிய, 12 கோவில்களிருந்து பெருமாள் சுவாமிகள், கருட வாகனத்திலும், சுவாமிகளுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளி, சேவை சாதித்தனர். 12 கருட சேவையையும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.