பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
11:04
தஞ்சாவூர் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள் என கூறும் திருநங்கை, பிளாஸ்டிக் பைகளை வாங்கி, மூங்கில் கூடையை கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர், சத்யா, 26. திருநங்கையான இவர், டிப்ளமோ படித்துள்ளார். சில ஆண்டுகளாக, பல்வேறு அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளார். திருநங்கை என்பதால், வேலை கிடைக்கவில்லை. வேலை கேட்டு, கலெக்டரிடமும் மனு கொடுத்திருந்தார்.தஞ்சாவூர் பெரிய கோவிலில், மாவட்ட நிர்வாகமும், ரோட்டரி கிளப் தொண்டு நிறுவனமும் இணைந்து, பிளாஸ்டிக் இல்லா பெரிய கோவில் என்ற திட்டத்தை, மார்ச், 13ல் துவங்கி, செயல்படுத்தி வருகிறது.கோவில் வளாகத்தில், பக்தர்கள் கொண்டு வரும், கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி கொள்வதற்காக, திருநங்கை சத்யாவை, கலெக்டர் அண்ணாதுரை பணியில் அமர்த்தியுள்ளார்.சத்யா கூறியதாவது:இந்தப் பணி தற்காலிகமானது தான். இதை நீங்கள் சிறப்பாக செய்தால், நிரந்தரமாக பணியில் அமர்த்தப்படுவீர்கள் என, கலெக்டர் உள்ளிட்டவர்கள், பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். என்னை போன்ற திருநங்கையர், சரியான வாய்ப்பு கிடைக்காததால், பிச்சை எடுப்பது, தவறான காரியங்களில் ஈடுபடுவது போன்ற சூழ்நிலை உண்டாகிறது.நான், அதுபோன்ற செயல்களை செய்யக் கூடாது என்பதில், தெளிவாக இருக்கிறேன். பிளாஸ்டிக் ஒழிப்பு பணியை செய்வதில் பெருமைப்படுகிறேன். பக்தர்களிடம் மூங்கில் தட்டை கொடுத்து, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பேராபத்தையும் எடுத்து சொல்கிறேன். என்னைப் போலவே எல்லா திருநங்கையருக்கும், நல்ல வாய்ப்பை தாருங்கள்; அவர்கள் வழ்கையிலும் பெரிய மாற்றங்கள் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.