பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
12:04
தஞ்சாவூர், தஞ்சை பெரியகோவிலில் வருகிற 26ம் தேதி சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, தேர் அலங்கரிப்பதற்காக பந்தகால் நடும் விழா இன்று காலை நடந்தது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா, கடந்த,12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும், 26ம் தேதி நடைபெறுகிறது. தேரோட்ட விழாவை முன்னிட்டு, தஞ்சை மேல வீதியில் உள்ள தேர் மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரை அலங்கரிக்கும் பணிகள் துவங்கவுள்ளன. இதற்காக, இன்று காலை 8 மணிக்கு பந்தகால் நடும் விழா நடந்தது. முன்னதாக மஞ்சள், திரவிய பொடி ஆகியவற்றால் பந்தகால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்து தேரில் பந்தகாலை நட்டனர்.